Friday, February 15, 2013

பகிரங்க மன்னிப்பு கோருமாறு இந்திய பிரதமருக்கு 11 வயது சிறுமி நோட்டீஸ்


பகிரங்க மன்னிப்பு கோருமாறு இந்திய பிரதமருக்கு 11 வயது சிறுமி நோட்டீஸ்

இந்தியாவில் நடைமுறையில் உள்ள 'தகவல் அறியும் உரிமை சட்டத்தை' பெரும்பாலானோர் தவறாக பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டிய அந்நாட்டுப் பிரதமர் மன்மோகன் சிங் அதற்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும். இல்லையேல் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று 11 வயது சிறுமியொருவர் பிரதமருக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

'காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியின் மருத்துவ சிகிச்சைக்காக செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு?' என, தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு காங்கிரஸ் மற்றும் மத்திய அரசு வட்டாரங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தனிப்பட்ட மனிதர்களின் மருத்துவ செலவு பற்றி தகவல் கேட்பதா என காங்கிரஸ் தலைவர்கள் எதிர்த்தனர்.

இதற்கிடையில் கடந்த ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி புதுடில்லியில் நடந்த தகவல் உரிமை சட்ட மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், 'தகவல் பெறும் உரிமை சட்டத்தை தவறாக பயன்படுத்தும் சிலர் தேவையே இல்லாத தகவல்களையும் தனிப்பட்ட தகவல்களையும் ஒன்றுக்குமே உதவாத தகவல்களையும் கேட்கின்றனர். ஆம்னி பஸ் அளவிற்கு அவர்கள் கேட்கும் தகவல்களை திரட்ட வேண்டியுள்ளது' என கருத்துத் தெரிவித்திருந்தார்.

இதற்கு உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த தகவல் உரிமை சட்ட ஆர்வலரான 11 வயதான மாணவி ஊர்வசி சர்மா என்பவர், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தனது வழக்கறிஞர் மூலம் கடந்த திங்கட்கிழமை நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த நோட்டீஸில், 'அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்ட நான் நீங்கள் தெரிவித்த கருத்துகளால் மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். இந்த நோட்டீஸ் மூலம் தெரிவிப்பது என்னவென்றால் எதன் அடிப்படையில் நீங்கள் அவ்வாறு கூறினீர்கள்? அதற்கான ஆதாரங்கள் உங்களிடம் உள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும். இல்லையேல், இன்னும் 60 நாட்களுக்குள் அவ்வாறு பேசியதற்காக வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதைச் செய்ய தவறினால் உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அந்த சிறுமி அனுப்பியுள்ள நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி : http://tamil.dailymirror.lk/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/pirapalankal/55080------11---.html

1 comment:

  1. 11 வயது சிறுமியின் ஊழலுக்கு எதிரான உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிப்போம் . . .!!!

    ReplyDelete